மான்டிகார்லோ: உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச், மான்டிகார்லோ ஓபனில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். செர்பிய நட்சத்திரம் ஜோகோவிச் (34வயது), கொரோனா தடுப்பூசி போடாததால் ஆஸி. ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. மற்ற நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதிலும் சிக்கல் நீடிக்கிறது. பிப்ரவரியில் நடந்த துபாய் ஓபன் காலிறுதியில், தரவரிசையில் 123வது இடத்தில் இருந்த செக் குடியரசு வீரர் ஜிரி வெஸ்லியிடம் தோற்று வெளியேறினார். அதனால் தரவரிசையில் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ரஷ்யாவின் மெத்வதேவ் முதல் இடத்துக்கு முன்னேறினார்.
அதன் பிறகு நடந்த மெக்சிகோ ஒபன், பாரிபா ஓபன், மயாமி ஓபன் உட்பட எதிலும் ஜோகோவிச் விளையாடவில்லை. ஆனாலும், இடையில் நடந்த போட்டிகளில் மெத்வதேவ் தோற்கவே, புள்ளிகள் அடிப்படையில் ஜோகோவிச் மீணடும் முதல் இடத்துக்கு முன்னேறினார். இந்நிலையில் மொனோகாவில் நடைபெறும் மான்டிகார்லோ மாஸ்டர்ஸ் தொடரில் நேரடியாக 2வது சுற்றில் களம் இறங்கினார். ஸ்பெயின் வீரர் டேவிடோவிச் போகினாவுடன் (22 வயது, 46வது ரேங்க்) மோதிய அவர் 3-6, 7-6 (7-5), 1-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். இப்போட்டி 2 மணி, 54 நிமிடங்களுக்கு நீடித்தது.