சென்னை: திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு, தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பயணக் பொதுக் கூட்டம் கடந்த 3ம் தேதி நாகர்கோவிலில் தொடங்கி 25ம் தேதி சென்னையில் முடிவடைகிறது. இதையொட்டி, காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே காமராஜர் வீதியில் பயண பொதுக்கூட்டம் நடந்தது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசியதாவது:- மாநில அரசு நேரடியாக மத்திய அரசை அணுக முடியவில்லை. இதனால், டெல்லியில் இருந்து கவர்னரை நியமித்துள்ளனர். அவர் தபால்காரர் வேலை மட்டும் தான் செய்ய வேண்டுமே தவிர, அனுப்பும் தபால்களை பிரித்து பார்க்கும் வேலை செய்தால், அது அதிகப்பிரசங்கிதனமாக தான் இருக்கும். அரசியல் சட்டத்தில் என்ன இருக்கிறதோ அதை நிறைவேற்ற வேண்டும், மாநில உரிமைகளை இவர்கள் பிரிக்கிறார்கள். மத்தியில் இருப்பவர்கள் இங்கு ஆட்சிக்கு வர முடியாததால், இந்த ஆட்சிக்கு நல்ல பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காக குறுக்கு வழியில் இப்படி செய்கிறார்கள். ஆட்சிகள் மாறலாம். ஆனால் அடிப்படை தத்துவங்கள் ஒன்றுதான். இவ்வாறு அவர் பேசினார்.