திருச்சி: திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு தினசரி விமான சேவையை மே 15-ம் தேதி முதல் இண்டிகோ தொடங்குகிறது. திருச்சியில் இருந்து குவைத்துக்கு வாரம் ஒரு முறை ஏர் இந்தியா நிறுவனம் ஜூலை மாதம் முதல் விமானத்தை இயக்குகிறது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்த நிலையில், சர்வதேச விமான சேவைகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. அதன்படி, உள்நாட்டு, வெளிநாட்டு விமான நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையை தற்போது அதிகரித்துள்ளன.
இந்த நிலையில், திருச்சி மற்றும் மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூருக்கு தினசரி விமான சேவை வழங்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. திருச்சி மற்றும் கோலாலம்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி நேரடி விமான சேவை வழங்கப்படும் என்றும் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு 6E 1817 என்ற விமானமும், திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு 6E 1816 என்ற விமானமும் இயக்கப்படும் எனவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.