தென்காசி: தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இலங்கை அருகே வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று மாலை கொட்டித்தீர்த்த கனமழையால் மெயின்அருவி, ஐந்தருவி உட்பட பழைய குற்றால அருவிகளில் மிதமான அளவிற்கு தண்ணீர் வழிகிறது.
கோடைகாலம் தொடங்கிய முதலே அருவிக்கரை வறண்டு காணப்பட்ட நிலையில் தற்போது அருவிகளில் தண்ணீர் கொட்டுவது சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளை முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த 2 வாரமாக கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் தற்போது இதமான சூழலால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.