×

இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவு நீதிக்கு புறம்பானது: ஓபிஎஸ் கண்டனம்

சென்னை: இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவு நீதிக்கு புறம்பானது என ஓ.பன்னீர்செல்வம்  கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து, படகுகளையும் பறிமுதல் செய்தனர். இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த இலங்கை நீதிமன்றம் மீனவர்களை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டு, சிறையில் இருந்து வெளி வர நினைத்தால் ஒவ்வொரு மீனவரும் தலா ரூ.1 கோடி செலுத்திவிட்டு பிணையில் செல்லலாம் என்று உத்தரவிட்டுள்ளது. இலங்கை நீதிமன்றத்தின் இந்த செயல் நீதிக்குப் புறம்பானது.

தமிழக மீனவர்கள் மீது மிகப் பெரும் அநீதியை இழைத்துள்ள இலங்கை நீதிமன்றத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கைக்கு பல உதவிகளை செய்து கொண்டிருக்கும் நாடு இந்தியா. இப்படிப்பட்ட உதவி செய்கிற நட்பு நாடான இந்திய நாட்டு மீனவர்களிடம் ரூ.1 கோடி கட்டணம் செலுத்தச் சொல்வதும், அவர்களை துன்புறுத்துவதும், சிறைபிடிப்பதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்து ஏலத்தில் விடுவதும் செய்நன்றி மறத்தலாகும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு, இலங்கை நாட்டு சிறையிலுள்ள தமிழக மீனவர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வரவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உதவியுடன் மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Sri Lanka ,OBS , Sri Lankan Court, Order, Justice, OPS Condemnation
× RELATED போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில்...