×

ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி மற்றும் வன்கொடுமைகளை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் இன்னல்களை களையவும், அவர்களுக்கு  இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் வன்கொடுமைகளை அரசு இரும்புக்கரம்  கொண்டு அடக்கும். மேலும்  சமபந்தி போஜனம் இனிமேல் சமத்துவ விருந்து என்று பெயர்  மாற்றம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை நடந்தது கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

வன்கொடுமையைத் தடுக்க நாம் எத்தனையோ முயற்சிகள் எடுத்து வருகிறோம். ஆனாலும் ஆங்காங்கே சில சம்பவங்கள் தலைதூக்கவே செய்கிறது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர்களுக்கு வழக்கின் தன்மைக்கேற்றவாறு ரூ.85 ஆயிரத்தில் இருந்து ரூ.8லட்சத்து 25 ஆயிரம்வரை இழப்பீடு வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தொகை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இனி, பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைந்தபட்சமாக ஒரு லட்சம் ரூபாயும், அதிகபட்சமாக ரூ.12 லட்சம்  மாநில அரசு நிதி மூலம் உயர்த்தி
வழங்கப்படும்.

இதற்கான அரசாணையும் போடப்பட்டுவிட்டது. இதுதொடர்பான வழக்குகளில் 60 நாட்களுக்குள் விசாரணையை முடிப்பதற்குத் தலைமைச் செயலாளர்  தலைமையில் நடத்தப்படும் சட்டம் - ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டங்களில், அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோரைச் சமுதாயக் கண்ணோட்டத்துடன் அணுகி, அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தை ஆற்றும் முயற்சியாக முறையாக நிவாரணம், வளமான எதிர்காலத்திற்கான உத்தரவாதம்’ ஆகியவற்றை வழங்குவதற்குத் தேவையான விழிப்புணர்வுப் பயிற்சிகள் வழங்கப்படும்.

2022-2023ம் ஆண்டின் மொத்த ஒதுக்கீடான ரூ.4281 கோடி  நிதியில் கல்விசார்ந்த திட்டங்களுக்கான ரூ.3571 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி உதவித் தொகையுடன், ஆதிதிராவிட மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கல்விக் கட்டண சலுகைகள், விலையில்லாச் சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை, நந்தனத்தில் எம்.சி.ராஜா பெயரால் 1961ம் ஆண்டுமுதல், மாணவர் விடுதி துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது அதனை மிகப் பிரமாண்டமானதாக கட்ட அரசு முடிவெடுத்துள்ளது. எம்.சி.ராஜா பெயரிலான விடுதி வளாகத்திற்குள்ளேயே தற்போது காலியாக உள்ள இடத்தில் சுமார் 75,000 சதுர அடிபரப்பளவில் 6 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய மாணவர் விடுதி ரூ.40 கோடி செலவில் கட்டப்படும்.

இன்று (நேற்று) காலை சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் என்னை சந்தித்து, ஆகஸ்ட் 15 விடுதலை நாள் உள்ளிட்ட முக்கிய நாட்களில் இதுவரை நடந்து வந்த சமபந்தி போஜனம் என்பதை பெயர் மாற்ற வேண்டுமென்று வேண்டுகோளை எடுத்து வைத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று இனிமேல் சமத்துவ விருந்து என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என்பதை இந்த கூட்டத்தின் மூலமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், அனைத்துத் துறைகளிடமிருந்து தொகுதிவாரியாக  பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், அரசுப்பணிகளில் ஆதிதிராவிடருக்கான குறைவுப் பணியிடங்கள் கணக்கிடப்பட்டுள்ளது. ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் இன்னல்களை களையவும், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் வன்கொடுமைகளை நமது அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கும்.

ஒருபக்கம் சமத்துவபுரம் இன்னொருபக்கம் ‘சமூகத்தில் அனைவரும் சமம்’ என்ற கோட்பாட்டை, சட்டத்தின் வாயிலாகவும் விழிப்புணர்வு பரப்புரைகள் வாயிலாகவும் மேற்கொள்ளும் நமது அரசின் செயல்பாடு தான் இன்றைக்கு இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய ‘திராவிட மாடல்’ என்பதை பெருமையுடன் பதிவு செய்கிறேன். இந்த ‘மாடல்’, அடக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட - வஞ்சிக்கப்பட்ட மக்களினுடைய குரல். அவர்களது உரிமைகளைப் பெற்றுத் தரும் குரல். தோளோடு தோள் நின்று அவர்களை பாதுகாக்கும் குரல். அவர்களின் வாழ்வியல் பொருளாதார முன்னேற்றத்திற்கு நமது அரசு எப்போதும் துணை நிற்கும்.

எனவே, இந்தக் கூட்டத்தில் உறுப்பினர்கள் பல கருத்துக்களை, பல யோசனைகளை, இந்த அரசு செய்யவேண்டிய பணிகள் குறித்து சொல்ல இருக்கிறீர்கள். உங்களுடைய மேலான ஆலோசனைகளை செயல்படுத்தி, வரக்கூடிய காலக்கட்டத்தில் அதை நிறைவேற்றி தருவோம். அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நமது அரசு முன்னெடுக்கிறது. அதனைச் செயல்படுத்த அரசுக்கு எல்லா வகையிலும் நீங்கள் உதவி செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Tags : Chief Minister ,MK Stalin , Adithravita and Indigenous Peoples, Violence, Chief MK Stalin
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...