×

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணாசாலையில் ரூ.485 கோடியில் மேம்பாலம்: சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

* மெரினா முதல் கிண்டி வரை மேம்பாலம் கட்ட முடிவு
* சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறைக்க அதிரடி திட்டங்கள்
* தமிழகம் முழுவதும் சாலைகள் அகலப்படுத்த ரூ.2,300 கோடி ஒதுக்கீடு

சென்னை: சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.485 கோடியில் உயர் மட்ட சாலை அமைக்கப்படும், கலங்கரை (மெரினா) விளக்கம் முதல் கிண்டி வரை உயர் மட்ட சாலை அமைக்க திட்ட அறிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த பின்பு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:

தென் தமிழகத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி துறைமுகத்தை வட பகுதியில் தொழிற்சாலைகள் நிறைந்த செங்கல்பட்டு நகரத்துடன் இணைப்பதன் மூலம் தொழிற்சாலைகளுக்கு தங்கு தடையற்ற ஏற்றுமதி, இறக்குமதி வசதிகளை அளிக்க இயலும். அதன்படி, செங்கல்பட்டு நகரத்தை திருச்சி, புதுக்கோட்டை, மானாமதுரை வழியாக தூத்துக்குடி துறைமுகத்துடன் இணைக்கும் துறைமுக சாலையை 4 வழித்தட சாலையாக அமைக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.4 கோடி மதிப்பில் தயாரிக்கப்படும். இதன் மூலம் தென் தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக ஏதுவாகும்.

கோவை, பொள்ளாச்சி, பழனி, ஆத்தூர், காரியாப்பட்டி வழியாக தூத்துக்குடி துறைமுகத்துடன் இணைக்கும் தொழிற் தட துறைமுக சாலையை 4 வழித்தட சாலையாக அமைக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.4 ேகாடி மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.  முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 150 கி.மீ., சாலைகளை நான்கு வழித்தடமாகவும், 600 கி.மீ., சாலைகளை இருவழித்தடமாகவும் ரூ.2300 கோடி மதிப்பில் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும்.

 சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, எஸ்ஐஇடி கல்லூரி சாலை சந்திப்பு, செனடாப் சந்திப்பு, நந்தனம் சந்திப்பு மற்றும் சிஐடி நகர் சாலை சந்திப்புகளை கடந்து சைதாப்பேட்டை பேருந்து நிலையம் வரை ரூ.485 ேகாடி மதிப்பில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும். இதனால் தடையற்ற சீரான வாகன போக்குவரத்து உறுதி செய்யப்படும்.

சென்னை மாநகர பகுதியில் கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை உயர்மட்ட சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.45 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படும். பெரிய தெற்கத்திய சாலையில் ஓடிஏ அருகே மேம்பாலம் மற்றும் கோயம்பேடு மேம்பாலம் அருகே நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்க ரூ.10 லட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தில் குன்றத்தூர் சாலை சந்திப்பில் மேம்பாலம் ரூ.322 கோடி மதிப்பிலும், பாடி மேம்பாலம் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலத்தினை அகலப்படுத்துதல் பணி ரூ.100 கோடி மதிப்பிலும், சென்னை உள்வட்ட சாலையில் பாடி மேம்பாலம் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலத்தினை ரூ.100 கோடி மதிப்பில் இரு ஐந்து வழித்தடமாக அகலப்படுத்தப்படும். தாம்பரம் சண்முகம் சாலையை சென்னை திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் சாலை ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

சென்னை மாநகரப் பகுதியில் உள்வட்ட சாலையில், செந்தில் நகர் சந்திப்பு, டெம்பிள் பள்ளி சந்திப்பு, கேந்திரிய வித்யாலயா பள்ளி மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம் ரூ.56 கோடி மதிப்பில் அமைக்கப்படும். ரயில்வே மேம்பாலங்கள் 8 மாவட்டங்களில் 12 இடங்களில் ரூ.577.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். விரிவான திட்ட அறிக்கை முடிக்கப்பட்ட 7 இடங்களில் ரயில்வே மேம்பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 2 மாவட்டங்களில் ரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.86 லட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

கோவை, திருச்செங்கோடு, திருவண்ணாமலை ஆகிய 3 நகரங்களுக்கு புறவழிச்சாலைகள் ரூ.500 கோடி மதிப்பில் அமைக்கப்படும். மேலும் ஈரோடு, தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் நகருக்கு புறவழிச்சாலைகள் அமைக்க ரூ.40 லட்சம் செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். காலநிலை மாற்றங்களால் ஏற்படும் வெள்ள பெருக்கினை கையாளும் விதமாக, அனைத்து காலநிலைகளிலும் தங்கு தடையற்ற போக்குவரத்து திட்டம் என்ற முதல்வரின் திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைத் துறை சாலைகளில் மொத்தமுள்ள 435 தரைப்பாலங்களும் உயர்மட்ட பாலங்களாக ரூ.1105 கோடி மதிப்பீட்டில் 2026க்குள் கட்டி முடிக்கப்படும்.

 ஈரோடு, கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் மொத்தம் 9 ஆற்றுப் பாலங்கள் ரூ.136.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். உதகமண்டலம் நகருக்கு மாற்று பாதை ரூ.70 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். விருதுநகர் மாவட்டம் பக்தர்கள் பாதயாத்திரை செல்ல நடைபாதை மற்றும் கோயில் கிரிவலப் பாதை போன்ற பணிகள் ரூ.35 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும். ஜமூனாமரத்தூர் மலைச்சாலை மற்றும் கொடைக்கானல் மலைச்சாலைகளை மேம்பாடு செய்ய ரூ.1.20 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.41.75 கோடி மதிப்பில் மீனவர் பகுதியில் கடல் அரிப்பை தடுக்க தடுப்பு சுவர் கட்டப்படும். மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கைபடி 47 கிராமங்களை இணைக்க புதிய இணைப்பு சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.75 லட்சம் மதிப்பில் தயாரிக்கப்படும். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பசுமலையில் புதிய சாலை ரூ.26.33 ேகாடி மதிப்பில் அமைக்கப்படும். வேலூர் சிஎம்சி எதிரில் சுரங்கப்பாதை மற்றும் கரூர் பேருந்து நிலையத்தில் நடைமேம்பாலம் அமைக்க ரூ.25லட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் -3ன் மூலமாக 400 கி.மீ., நீள முக்கிய மாநில சாலைகளை நான்கு வழித்தடமாக அகலப்படுத்த பன்னாட்டு நிதி நிறுவன கடனுதவி பெற நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு கடல்சார் வாரியம் மூலம் படகு போக்குவரத்தை மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். ராமேஸ்வரம் சிறு துறைமுக பகுதியில் ஒரு புதிய துறைமுக நிர்வாக அலுவலகக் கட்டிடம் கட்டப்படும். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

* சென்னை ஓடிஏ அருகே மேம்பாலம்.
* கோயம்பேடு மேம்பாலம் அருகே நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடைமேம்பாலம்.
* பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தில் குன்றத்தூர் சாலை சந்திப்பில் ரூ.322 கோடி மதிப்பில் மேம்பாலம்.
* பாடி மேம்பாலம் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலம் ரூ.100 கோடியில் அகலப்படுத்தப்படும்.
* சென்னை நூறடி சாலையில் செந்தில் நகர் சந்திப்பு, டெம்பிள் பள்ளி சந்திப்பு, கேந்திரிய வித்யாலயா பள்ளி மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்கப்படும்.

Tags : Anna Salai ,Denampet ,Saidapet ,Minister ,EV Velu ,Legislative Assembly , Denampet, Saidapet, Annasalai, Overpass, Legislature, Minister E.V.Velu
× RELATED சென்னை சைதாப்பேட்டை பாத்திமா பள்ளி...