×

சாலையோரம் நிறுத்தியிருந்தபோது விபத்து டிரைலர் லாரி மீது டாரஸ் லாரி மோதல் 2 டிரைவர் உள்பட 3 பேர் நசுங்கி பலி: நீண்டநாள் நண்பர்கள் சந்தித்தபோது நடந்த துயரம்; பூந்தமல்லி அருகே நள்ளிரவில் பயங்கரம்

பூந்தமல்லி: தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் தாமோதரன்(48). டிரைலர் லாரி டிரைவர். இவரது நண்பர் பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்த பீட்டர் ராஜ்குமார்(44). இவர் மெட்ரோ ரயில் பணியில் வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும், சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரே இடத்தில் வேலை செய்து வந்தபோது நண்பர்களாகினர். அதற்கு பிறகு பிரிந்து விட்டனர். இருப்பினும் நேரம் கிடைக்கும்போது நேரில் சந்தித்து கொண்டனர். அவ்வப்போது செல்போனில் பேசிக்கொள்வார்கள். இந்நிலையில், தாமோதரன், பீட்டர் ராஜ்குமாருக்கு போன் செய்து, `நான் தேனியில் இருந்து ஸ்ரீஹரிகோட்டாவுக்கு செல்கிறேன். பூந்தமல்லி வழியாகத்தான் வருகிறேன். நாம் சந்திக்கலாமா’ என்று கேட்டுள்ளார்.

அதற்கு பீட்டர் ராஜ்குமாரும் சம்மதித்தார். அதன்படி, நேற்று முன்தினம் தேனியில் இருந்து தாமோதரன் டிரைலர் லாரியில் கிரேன் ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு புறப்பட்டார். நள்ளிரவு 11.30 மணியளவில் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, பூந்தமல்லி அருகே வந்தபோது, டிரைலர் லாரியை சாலையோரம் நிறுத்தினார். ஏற்கனவே திட்டமிட்டபடி பீட்டர் ராஜ்குமாரும் அங்கு வந்தார். இருவரும் லாரியின் முன்புறம் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஜல்லி ஏற்றி வந்த டாரஸ் லாரி, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தாமோதரன் ஓட்டி வந்த டிரைலர் லாரி மீது மோதியது.

இதில் டாரஸ் லாரி முன்னோக்கி சென்றதில், அங்கு பேசிக்கொண்டிருந்த தாமோதரன், பீட்டர் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மேலும் டாரஸ் லாரியை ஓட்டி வந்த திருநின்றவூர் பாக்கம் பகுதியை சேர்ந்த முருகேசன்(37) என்பவரும் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விபத்தில் சிக்கிய லாரிகளை கிரேன்கள் மூலம் போலீசார் அகற்றினர்.


Tags : Taurus ,Poonamallee , A Taurus truck collides with a trailer truck while parked on the roadside, killing 3 people, including 2 drivers: the tragedy of meeting longtime friends; Terrible at midnight near Poonamallee
× RELATED ரிஷபம்