பவானி: ஈரோடு - பவானி, மேட்டூர், தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் 35 கி.மீட்டர் தொலைவுக்கு ரூ.80 கோடி மதிப்பில் இரு வழிப்பதையாக மாற்றும் திட்டப்பணி நடந்து வருகிறது. ஈரோடு-பவானி,மேட்டூர்,தொப்பூர் சாலையில் (என்.ஹெச் 544) அதிக அளவில் வாகனங்கள் சென்று வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அடிக்அடி விபத்துகளும் நடந்து வந்தன. இதனால், இந்த சாலையை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டு, விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, 7 மீட்டர் அகலமுள்ள ரோட்டை 10 மீட்டர் வரை அகலப்படுத்தி, இருவழி சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட பணியாக ரோட்டின் இருபுறமும் விரிவாக்கத்துக்கு இடையூறாக உள்ள 1,342 மரங்களை வெட்டி அகற்றப்பட உள்ளது.
இதற்காக, மரங்களின் தன்மை, விலை நிர்ணயம் குறித்து கணக்கெடுக்க வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சென்னம்பட்டி வனச்சரக அலுவலர் செங்கோட்டையன் தலைமையில் ஊழியர்கள், ரோட்டோரத்தில் உள்ள மரங்களை கண்டறிந்து அளவீடு செய்து வருகின்றனர். பிளாட்டினம் மஹால் முதல் குட்டமுனியப்பன் கோயில் வரை 15 கி.மீ. தொலைவுக்கு ரூ.37 கோடி மதிப்பில் ஒரு பகுதியாகவும், குட்டமுனியப்பன் கோயிலிருந்து மேட்டூர் சாலை பெரும்பள்ளம் வரை ரூ.43 கோடியில் 20.02 கி.மீ. தொலைவுக்கு மற்றொரு பகுதியாக சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது.