நாகை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் நாகையில் அளித்த பேட்டி: மோடிக்கும், அமித்ஷாவுக்கும் இந்தி பேசும் மாநிலங்கள் தான் தேவை. இந்தியாவில் உள்ள மாநிலங்கள் தேவை இல்லை. மோடியை எதிர்க்கும் மிகப்பெரிய சக்தியாக, எதை பற்றியும் கவலைப்படாமல் தமிழக மக்களின் உரிமைகளை காக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறார். நாங்களும் இருக்கிறோம் என்று காட்டுவதற்காக அதிமுக சார்பில் வரி உயர்வு போராட்டங்கள் தமிழகத்தில் நடத்தி வருகின்றனர். எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் எவ்வளவு முயற்சி செய்தாலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அளவுக்கு உயர்ந்து நிற்க முடியாது.
புதுச்சேரி மற்றும் சென்னையில் கவர்னர்களின் செயல்பாடு மோசமாக உள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்ப மறுத்தவர் தமிழக கவர்னர். தமிழக அரசியலை புரட்டி விடலாம் என அண்ணாமலை பேசி வருகிறார். 150 ஆண்டுகால அரசியலை பின்பற்றும் மாநிலம் தமிழகம். இங்கே குஜராத்தை போலவோ, உத்தர பிரதேசத்தை போலவோ மக்கள் இல்லை. விழிப்புணர்வோடு இருக்கின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை பாஜக அகில இந்திய கட்சியல்ல, அது ஒரு மாவட்ட கட்சி. இவ்வாறு அவர் கூறினார்.