சென்னை: ஒமிக்ரான் வைரஸ் XE அல்லது எந்த வடிவத்தில் கொரோனா வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவது குறித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தன. ஜூன் மாதத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுவதை அதிமுக உறுப்பினர் விஜயபாஸ்கர் சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், XE வைரஸ் ஒமிக்ரானை விட 10 சதவீதம் வேகமாக பரவும் என்று கூறினாலும், இங்கிலாந்தில் 627 பேர் அளவில் பாதிப்பு இருப்பது ஆறுதல் தரும் செய்தி என்று தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்களில் ரேண்டம் முறையில் பரிசோதனைகள் எடுக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். 365 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகள் கொண்ட 2096 படுக்கை வசதிகளை ராஜீவ்காந்தி மருத்துவமனையிலும், அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் நாளை மறுநாள் முதலமைச்சர் தொடங்கி வைக்க இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் தற்போது வரை 10 கோடி பேருக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகவும், முதல் தவணை 92 சதவிகிதம் பேருக்கும், இரண்டாவது தவணை 77 சதவிகிதம் பேருக்கும் போடப்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.