பேரையூர் : டி.கல்லுப்பட்டி அருகே 43 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த ஜல்லிக்கட்டில், காளைகள் முட்டி 16 பேர் காயமடைந்தனர்.மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கிராமத்தில் உள்ள பஞ்ச பாண்டவர்கள் கோயில் திருவிழாவை முன்னிட்டு 43 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. 456 காளைகள், 186 மாடுபிடி வீரர்கள் பங்கேற்புடன் ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் வீரர்கள் 10 பேர், காளை உரிமையாளர்கள் 5 பேர், பார்வையாளர் ஒருவர் என 16 பேர் படுகாயமடைந்தனர். அதில் 3 பேர் மதுரை அரசு மருத்துவமனை, 13 பேர் பேரையூர், திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
7 காளைகளை அடக்கிய அலங்காநல்லூர் பெரியஊர்சேரி ஆனந்த் முதல் பரிசு, 4 காளைகளை அடக்கிய சாமநத்தம் முருகன் 2வது பரிசு, உசிலம்பட்டி நல்லுத்தேவன்பட்டியை சேர்ந்த சந்தோஷ் 3வது பரிசு பெற்றனர். தென்பழஞ்சி கஞ்சிகொடி காளை முதல் பரிசு, சின்னக்கட்டளை ஆண்டிச்சாமி காளை 2ம் பரிசு, கல்லணை அன்பரசன் காளை 3ம் பரிசையும் வென்றது.
விழா ஏற்பாடுகளை நல்லமரம் விழாக் கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.