சென்னை: மெரினா கடற்கரை கலங்கரை விளக்கு பொறுப்பு அலுவலராக குமார் ராஜா(44) உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தபோது, 7 மணி அளவில் கலங்கரை விளக்கு பகுதியில் டிரோன் கேமரா ஒன்று சுற்றி வந்தது. இதை பார்த்த குமார்ராஜா. மேலே பறந்த டிரோன் கேமராவை கண்காணித்தார். அப்போது அது கலங்கரை விளக்கு வளாகத்தில் விழுந்தது. இதை குமார் ராஜா மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும், தடை செய்யப்பட்ட பகுதியான கலங்கரை விளக்கு கட்டிடத்தை படம் பிடித்த நபர்கள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் அளித்தார்.
அந்த புகாரின் படி மெரினா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, திருவான்மியூர் ஆர்.கே.நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்த பொறியாளர் புவனேஷ்(30) மற்றும் பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் அவரது சகோதரர் சுதர்சன் ஆகியோர் போலீசாரிடம், இந்த டிரோன் கேமரா தங்களுடையது என்றும், மெரினா அழகை படம் பிடிக்க இயக்கியதாக கூறினார். மேலும், டிரோன் கேமரா மேலே பறந்தபோது திடீரென சிக்னல் கிடைக்காததால் கீழே விழுந்துவிட்டதாக கூறினார். ஆனால் போலீசார் டிரோன் கேமரா பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
அதற்கு பொறியாளர் புவனேஷ் ‘நான் ஆஸ்திரேலியாவில் எலக்ட்ரானிக் இன்ஜினியராக வேலை செய்து வருகிறேன். டிரோன் கேமரா பறக்க விட தடை விதித்து இருப்பது எனக்கு தெரியாது’ என்று கூறி மன்னிப்பு கேட்டார். ஆனால், போலீசார் டிரோன் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும். அதை கேமரா தரமுடியாது என்று கூறி இருவரையும் கடுமையாக எச்சரித்தும், அவர்களிடம் கடிதம் எழுதி வாங்கி கொண்டு, எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் வரவேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர்.கடந்த மாதம் கலங்கரை விளக்கு கட்டிடம் குண்டு வைத்து வெடிக்கப்படும் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மர்ம நபர் ஒருவர் புகைப்படத்துடன் பதிவு செய்து இருந்தார். இதனால் கலங்கரை விளக்கு பகுதியில் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கலங்கரை விளக்கு கட்டிடத்தை சுற்றி டிரோன் கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.