சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் சொத்துவரியை, மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், இணையதளம், நம்ம சென்னை செயலி, பேடிஎம் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு ஆகியற்றின் வாயிலாகவும், சென்னை மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள், உரிமம் ஆய்வாளர்கள் வாயிலாகவும் எளிதாக செலுத்தலாம்.
மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி சீராய்வு செய்ய தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட சொத்து வரி சீராய்வு குழு பரிந்துரை செய்துள்ளது. சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரையில், சீராய்வு குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், புதிய சொத்து வரி விதம் மன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்படும். எனவே 2022 முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏற்கனவே மாநகராட்சிக்கு செலுத்தி வந்த கட்டண விகிதத்திலேயே ஏப்ரல் 15க்குள் செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஏப்ரல் 15க்குள் சொத்து வரி செலுத்தும் நபர்களுக்கு 5% ஊக்கத்தொகை வழங்கப்படும். தவறும் நபர்களுக்கு 2% தண்டத்தொகையுடன் சொத்து வரி வசூலிக்கப்படும். மறுசீராய்விற்கு பிறகான சொத்து வரி கட்டணம் மன்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு முறையாக அறிவிக்கப்படும். அதன் பின்னர், சொத்து உரிமையாளர்கள் 2022-23ம் ஆண்டு முதல் அரையாண்டுக்கான மீதமுள்ள சொத்து வரியை செலுத்தலாம். சென்னை மாநகராட்சிக்கு இணையதளம் மற்றும் கைபேசி செயலி மூலமாக சொத்துவரி செலுத்தும்போது, ஏதேனும் குறைபாடுகள் அல்லது சிக்கல்கள் ஏற்படின், சென்னை மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்யவும் அதனடிப்படையில் தீர்வு செய்யவும் தற்பொழுது வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.