திண்டுக்கல்: திண்டுக்கல்லில் திருமணம் செய்த 9 மாதத்திலேயே காதல் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, கணவன் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டிகோரெயான் (24). கோவையில் உள்ள செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஜெப்ரின் (20) என்ற பெண்ணை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் தம்பதி, திண்டுக்கல் ஒய்எம்ஆர்.பட்டி காளியம்மன் கோவில் அருகே வாடகைக்கு குடியேறினர்.
இவர்களுடன் ஸ்டிகோரெயான் தாயாரும் வசித்து வந்தார். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஸ்டிகோரெயான், மனைவியை கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார். பின்னர் 2வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். தலை, கை, கால்களில் பலத்த காயமடைந்த அவரை, பொதுமக்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காதல் திருமணம் செய்த 9 மாதங்களில் மனைவியை படுகொலை செய்துவிட்டு கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.