×

ரசாயன உலை வெடித்து 6 தொழிலாளர்கள் பலி : குஜராத்தில் இன்று அதிகாலை சோகம்

பரூச்: குஜராத்தில் இன்று அதிகாலை ரசாயன உலை வெடித்து சிதறியதில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் பருச் மாவட்டம் தஹேஜ் தொழிற்பேட்டை பகுதியில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் வழக்கம் போல் இரவுப் பணியில் தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை 5 மணியளவில திடீரென நடந்த வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உடல்சிதறி பலியாகினர். தகவலறிந்த மீட்புக் குழுவினர் மற்றும் போலீசார் உயிரிழந்த தொழிலாளர்களின் சடலங்களை மீட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பரூச் போலீஸ் எஸ்பி லீனா பாட்டீல் கூறுகையில், ‘இறந்த தொழிலாளர்கள் 6 பேரும் வெப்பம் அதிகம் உள்ள இயந்திரத்தின் அருகே வேலை செய்து கொண்டிருந்தனர்.

கெமிக்கலை காய்ச்சி ஊற்றும் போது திடீரென ரசாயன உலையில் ஏற்பட்ட வெடிவிபத்தால் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது உலைக்கு அருகில் வேலை செய்து கொண்டிருந்த 6 பேரும் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த அவர்களது உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தீயும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

Tags : Gujarat , Chemical reactor, explosion, 6 workers, killed
× RELATED ரோட்ஷோவில் கூடிய கூட்டத்தால் நல்ல...