வருசநாடு: வருசநாடு அருகே, கோடாலியூத்து மலைக்கிராமச்சாலை சேதமடைந்துள்ளது. இதை அகற்றி தார்ச்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருசநாடு அருகே, தும்மக்குண்டு ஊராட்சியில் கோடாலியூத்து மலைக்கிராமம் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு விவசாயம், ஆடு, மாடு வளர்த்தல், கோழி, வளர்த்தல் உள்ளிட்ட தொழில்களை பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
இந்த கிராமத்திற்கு போதிய சாலை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இது தொடர்பாக கிராம சபை கூட்டங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்கின்றனர். இதனால், விவசாயிகள் விளை பொருட்களை வெளியூர் கொண்டு செல்ல அவதிப்படுகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். விளைபொருட்களை தலைச்சுமையாகவோ, கட்டைவண்டி மூலமாக கொண்டு செல்கின்றனர். ஏற்கனவே உள்ள சாலையும் சேதமடைந்துள்ளது.
பால் கறவை தொழிலாளர்களும் அவதிப்படுகின்றனர். எனவே, கோடாலியூத்து கிராமத்திற்கு தார்ச்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கிராமவாசி முத்துச்சாமி கூறுகையில், ‘எங்கள் கிராமத்தில் போதிய அடிப்படை வசதி இல்லை. குறிப்பாக தார்ச்சாலை வசதியில்லை. மலைவாழ் மக்களை காட்டிலும் எங்கள் வாழ்க்கை தரம் குறைவாக உள்ளது. இது குறித்து தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.