சீர்காழி : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமத்தில் சுமார் 142 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி பாசனத்திற்கும் வடிகாலாகவும் இருந்து வருகிறது. ஏரி முழுவதும் அனைத்து மாதங்களிலும் தண்ணீர் இருந்து வருவதால் ஏரியில் நீர் வாத்து, கானாங்கோழி, கொக்கு மடையான் அதிகளவில் வந்து தங்குகின்றன. மேலும் வெளிநாட்டு பறவையான நத்தை குத்தி நாரை அதிக அளவில் வந்து தங்கி செல்கின்றன. ஏரியில் பறவைகள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மீன், நண்டு, நத்தைகளை வேட்டையாடி இரையாக உண்டு வருகின்றன. ஏரியின் நடுவே உள்ள மரங்களில் பறவைகள் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்து வாழ்கின்றன.
ஏரியில் பறவைகள் அதிகமாக இருப்பதை காண உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமானவர்கள் வந்து பார்த்து செல்கின்றனர். ஏரியை முழுமையாக தூர்வாரி படகு விட ஏற்பாடு செய்ய வேண்டும். பறவைகள் அதிகமாக வருவதால் சரணாலயம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.