×

இலங்கையில் இருந்து 19 தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

ராமேஸ்வரம்: இலங்கை திரிகோணமலை பகுதியில் இருந்து நேற்று இரவு 2 படகுகளில் புறப்பட்ட 19 தமிழர்கள், இன்று அதிகாலை அகதிகளாக தனுஷ்கோடி மற்றும் மண்டபம் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, உணவுக்கே வழியில்லாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர். இந்த சூழலில் இலங்கைவாழ் தமிழர்கள் பலர், அகதிகளாக தமிழகத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர்.

நேற்று இரவு இலங்கை திரிகோணைமலை பகுதியில் இருந்து 5 குடும்பங்களை சேர்ந்த 19 தமிழர்கள், அகதிகளாக தமிழகத்திற்கு 2 படகுகளில் புறப்பட்டனர். ஒரு படகில் புறப்பட்ட 2 குழந்தைகள் உட்பட 10 பேர் நேற்று இரவில் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். படகோட்டிகள் நள்ளிரவில் இவர்களை தனுஷ்கோடி அருகே அரிச்சல்முனை கடல் மணல் திட்டு பகுதியில் இறக்கி விட்டு இலங்கை திரும்பி சென்று விட்டனர்.

இன்று காலை மீனவர்கள் தெரிவித்த தகவலை தொடர்ந்து மணல் திட்டுப் பகுதிக்கு சென்ற இந்திய கடலோர காவல் படையினர், 10 பேரையும் மீட்டு அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் பத்திரமாக இறக்கி விட்டு சென்றனர். பின்னர் மரைன் போலீசார் அவர்களை ராமேஸ்வரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.இதே போல் மற்றொரு படகில் புறப்பட்டு வந்த ஒரு குழந்தை உட்பட 9 பேர், இன்று அதிகாலை மண்டபம் கடலோர பகுதியில் வந்திறங்கினர்.

அவர்களை மரைன் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர்.  இன்று காலை மட்டும் 7 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 19 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.  விசாரணைக்குப் பின்னர் மண்டபம் அகதிகள் முகாமிற்கு முறைப்படி அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

Tags : Tamils ,Sri Lanka ,Dhanushkodi , 19 Tamils from Sri Lanka arrive in Dhanushkodi as refugees
× RELATED இலங்கைக்கு கடலில் நீந்த முயன்ற கர்நாடக வீரர் சாவு