×

கண்ணமங்கலம் அருகே விநோதம் தென்னை மரத்துக்கு பாளை பூஜை: பிள்ளையாக போற்றும் கிராம மக்கள்

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அடுத்த அர்ஜூனாபுரம் கிராமத்தில் பூப்பெய்திய தென்னைக்கு நேற்று கிராம மக்கள் பாளை பூஜை  செய்து வழிபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த அர்ஜூனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் விவசாயி. இவரது நிலத்தில் வளர்ந்துள்ள தென்னை மரத்தில் முதல் முறையாக தேங்காய்கள் காய்த்துள்ளது. இதற்காக தென்னை மரத்துக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதுகுறித்து கால்நடை ஆய்வாளர் வேலு கூறியதாவது:

தென்னைய பெத்தா இளநீரு, பிள்ளைய பெத்தா கண்ணீரு என்ற பழமொழி பிரசித்தி பெற்றது.  விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் தென்னங்கன்றுகளை எங்கள் பிள்ளைகளாகவே பாவித்து வளர்த்து வருகிறோம். நம் வீட்டுப் பெண் குழந்தைகள் வளர்ந்து பூப்படைந்தால் அந்த நிகழ்வை விழாவாகக் கொண்டாடுகிறோம். அதைப்போலவேதான் கிராமங்களில் தென்னை மரங்கள் முதல் பாளை விட்டாலும் அதை நாங்கள் பூஜை, விருந்துடன் கொண்டாடுகிறோம். ஒரு வீட்டருகே ஒன்றுக்கு மேற்பட்ட தென்னைகள் இருந்தாலும், முதல் தென்னையின் முதல் பாளைக்குத்தான் இந்த மரியாதை யெல்லாம்.

தென்னையில் பாளை வெளியேறிவிட்டாலே பூஜைக்கான ஏற்பாடுகளில் இறங்கி விடுவோம். பூஜைக்கு தேதி குறிப்பதற்குள் பாளை வெடித்துவிடும். புது சேலை வாங்கிவந்து நல்ல நாள் பார்த்து பாளை பூஜை நடத்தப்படும். பாளை விட்ட தென்னையை நீராட்டி புது சேலை உடுத்தி, காது, மூக்கு, கழுத்துக்கு நகைகள்அணிவித்து, மஞ்சள், குங்குமம், மலர்களிட்டு அர்ச்சனைகள் செய்து, புட்டு சுற்றி பூஜை நடத்துவோம். பூஜை முடிந்தவுடன் வீட்டுக்கு வந்த உறவினர்களுக்கு, கிடா வெட்டி விருந்து படைத்து உண்டு மகிழ்வோம்.

சிலர் கோழி அடித்து விருந்து வைப்பார்கள். பாளை பூஜை விருந்துக்கு வருபவர்களில் விருப்பம் உள்ள சிலர் மொய் வழங்கிச் செல்வது உண்டு. மனித உயிர்களை மையப்படுத்தி வீடுகளில் நடைபெறும் வைபவங்களைப் போலவே, தென்னை முதல் பாளை விடும் நிகழ்வையும் இங்கே விசேஷமாகக் கொண்டாடுகிறோம். இயற்கையுடன் நெருங்கி, இயற்கையை வணங்கிடும் வாழ்க்கை கிராம மக்களிடம் இன்னும் நிலைத்திருக்கிறது. இயற்கையை காப்பதற்கான வழிகாட்டுதலை கிராம மக்களிடம் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.

Tags : Pal Puja ,Kankamangalam , coconut tree, pooja
× RELATED கண்ணமங்கலம் அருகே கொளத்தூர் ஏகாம்பர...