திருமலை: மேற்கு கோதாவரியில் ‘தன்னை கண்டுகொள்ளவில்லை’ என கூறி கள்ளக்காதலன் முகத்தின் மீது கள்ளக்காதலி மிளகாய் பொடி தூவி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சிந்தலபுடி அடுத்த மல்லேஸ்வரம் கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ். இவர் சத்துப்பள்ளியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி.
இந்நிலையில், யுவராஜ் தனது ஓட்டலில் வேலை செய்யும் சத்யவதியை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அவர்கள் தனியாக வீடு வாடகை எடுத்து வசித்து வந்துள்ளனர். ஆனால், கடந்த சில நாட்களாக சத்யவதியை, யுவராஜ் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். மேலும், வீட்டிற்கு பணமும் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் மதியம் சத்யவதி பிரியாணி கடைக்கு வந்துள்ளார். பின்னர், யுவராஜை கடைக்கு வெளியே அழைத்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென கையில் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை யுவராஜ் முகத்தின் மீது தூவியுள்ளார். தொடர்ந்து, கையால் அவரை தாக்கியுள்ளார். அப்போது, சத்யவதி ‘என்னால் தான் நீ இந்த நிலைக்கு வந்தாய். ஆனால், தற்போது என்னை நீ புறக்கணிக்கிறாய். சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் உன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு அனுப்பி விடுகிறாய்’ எனக் கூறினார்.
இதனை பார்த்த அப்பகுதிமக்கள் சண்டையை தடுக்க முயன்றனர். ஆனால், தடுக்க முயன்றவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து இருவரும் ஒருவர் மீது ஒருவர் சிந்தலபுடி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.