×

கல்லூரி மாணவி ஆணாக மாறி ேதாழியை திருமணம் செய்ய ஆசை: பெரம்பலூரில் காணாமல் போனவர்கள் பற்றிய திடுக் தகவல்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகேயுள்ள ஒரு மலையடிவார கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி, பெரம்பலூர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த 17 வயதான இன்னொரு மாணவி பெரம்பலூரில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு நர்சிங் படித்து வருகிறார். இருவரும் பக்கத்து ஊரிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பில் படிக்கும்போது இருந்தே ஒன்றாகப் படித்து வந்த நெருங்கிய தோழிகளாவர்.  

இந்நிலையில் கடந்த 5ம் தேதி காலை 8மணிக்கு கல்லூரிக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து சென்ற மாணவிகள், கல்லூரிக்கு போகாமலும், வீட்டுக்கும் திரும்பாமலும் மாயமாகிவிட்டனர்.
இது தொடர்பாக பெரம்பலூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்ததில் அதில் ஒரு மாணவி பெண்களுக்குரிய குணாதிசயங்கள் இல்லாமல் தலைமுடியை ஆண்கள் போல் அலங்கரிப்பதும், ஆண்கள் அணிகின்ற செருப்பு அணிவதுமான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இருவரும் சென்னைக்கு சென்று விட்டதாக தெரியவந்தது.

மேலும் சென்னை போரூர் ஓம் சக்தி நகரில் ஒருவரது வீட்டில் தங்கி இருப்பதாக தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சென்னைக்கு விரைந்து சென்ற தனிப்படை பெண் போலீசார் இரண்டு மாணவிகளையும் நேரில் விசாரித்தபோது ஆணாக மாறி வரும் மாணவியும் தோழியும் ஒன்றாக குடும்ப வாழ்க்கை வாழ்ந்திட முடிவுசெய்து அதற்கு ஏற்றபடி தோற்றத்தில் ஆணாக முழுமையாக மாற்றிக்கொள்ளவே சென்னை வந்ததாக தெரிவித்துள்ளனர். பின்னர் போலீசார் இருவரிடமும் நைசாகப் பேசி பெரம்பலூருக்கு அழைத்து வந்துள்ளனர். தற்போது இரு மாணவிகளுக்கும் சைல்டுலைன் அமைப்பின் மூலமாக கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது.

Tags : Perambulur , College Student, Friend, Perambalur,
× RELATED பெரம்பலூர் அருகே தடுப்பணையில் மூழ்கி 3 பெண்கள் உயிரிழப்பு