கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் கிராமத்தை சேர்ந்த தம்பதி எழிலன் - சுதா. இவர்களின் மகள் இ.எஸ்.தரங்கிணி (10). இவர் கவரைப்பேட்டை பெருவாயல் பகுதியில் உள்ள டி.ஜெ.எஸ். சி.பி.எஸ்.சி பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி நேராக நின்றபடி, உடலை பின்புறமாக கீழ் நோக்கி வளைத்து தலையால் கால்களை தொடக்கூடிய, டிம்பாசனம் எனும் யோகாசனத்தை, ஒரு நிமிடத்தில், 66 முறை செய்து உலக சாதனை படைத்துள்ளார். இவரது சாதனை, ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட், மற்றும் ‘ஆவம்சம் உலக சாதனை’ புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது. உலக சாதனை படைத்த மாணவி தரங்கிணி, அவருக்கு பயிற்சி அளித்த யோகா ஆசிரியர் சந்தியா ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில், டி.ஜெ.எஸ். கல்வி குழும தலைவரும் எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன், பள்ளி தாளாளர் டி.ஜெ.ஜி.தமிழரசன், முதல்வர் ஜெ.அசோக், ஆகியோர் கலந்துகொண்டு சாதனை மாணவியை பாராட்டி சிறப்பித்தனர்.