×

ஆலங்குடி கோயிலில் 14ல் குருப்பெயர்ச்சி விழா: லட்சார்ச்சனை துவங்கியது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் நவக்கிரக தலங்களில் குருபகவானுக்குரிய ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்ளது. குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் இக்கோயிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி குருபகவான் வரும் 14ம் தேதி (வியாழக்கிழமை) கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு இக்கோயிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு முதல்கட்டமாக குருபகவானுக்கு லட்சார்ச்சனை விழா நேற்று தொடங்கியது. இதனையொட்டி அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு  அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

குருபகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது. அலங்கரிக்கப்பட்ட உற்சவர் தட்சிணாமூர்த்தி சன்னதியில் லட்சார்ச்சனை பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரும் 10ம் தேதி வரை முதல்கட்ட லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. குருப்பெயர்ச்சிக்கு பின்னர் வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை 2ம் கட்ட லட்சார்ச்சனை நடைபெறுகிறது. மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் லட்சார்ச்சனையில் கலந்து கொண்டு பரிகாரம் செய்து கொள்ளலாம். லட்சார்ச்சனை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணிமுதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும்.


Tags : Aalangudi Temple ,Gurudi Festival , Alangudi, Temple, 14th, Kuruppeyarchi
× RELATED உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா...