பெரணமல்லூர் : பெரணமல்லூர் அருகே முத்துமாரியம்மன் கோயில் கூழ்வார்த்தல் திருவிழாவில் பக்தர்கள் முதுகில் அலகு குத்தி ராட்சத கிரேனில் தொங்கியபடி நேர்த்திக்கடன் செலுத்தினர்.திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த அன்மருதை கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் 14ம் ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழா நேற்று நடந்தது.
இதையொட்டி, கடந்த 3ம்தேதி அம்மனுக்கு பொங்கல் வைத்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று காலை அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம், பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து மதியம் 2 மணிக்கு பக்தர்கள் ஒன்று கூடி பம்பை, உடுக்கை ஊர்வலத்துடன் மழைவேண்டி முத்துமாரியம்மனுக்கு கூழ் வார்த்தனர்.
இதையடுத்து மாலை 4 மணிக்கு முதுகில் அலகு குத்தி கார், டிராக்டர் வண்டிகளை இழுத்து சென்றும், ராட்சத கிரேனில் அந்தரத்தில் தொங்கியபடி அம்மனுக்கு மாலை அணிவித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வாணவேடிக்கையுடன் வீதியுலா கொண்டு வரப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.