×

வேதாரண்யம் அருகே தகட்டூரில் பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் வினோதமான கோயில் திருவிழா

வேதாரண்யம் : வேதாரண்யம் அருகே தகட்டூர் மாப்பிள்ளை வீரன் திருமேனி அம்மன் கோயில் திருவிழா கடந்த 24ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நாள்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வீதிஉலா நடைபெற்றது.இந்நிலையில் நேற்று கோயிலின் முக்கிய திருவிழாவான வாழைப்பழத்தை பக்தர்கள் மீது வீசும் வினோத திருவிழா நடந்தது. முன்னதாக தகட்டூர் பைரவநாத சுவாமி ஆலயத்திலிருந்து கொப்பரை எடுத்து வரப்பட்டது. 5 கி.மீ. தூரம் வரை எடுத்து வரப்பட்டு கோயிலை வலம் வந்து பின்பு வாழைப்பழம் வீசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு பக்தர்கள் மீது வீசப்பட்ட வாழைப்பழங்களை பிடித்து எடுத்து சென்றனர்.

நிகழ்ச்சியில் வாழைப்பழத்தை பிடித்து உண்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பின்பு இரவு சுவாமி வீதி உலா காட்சியும், தேரோட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோயில் வளாகத்தில் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை நிவர்த்தி செய்ய ஆயிரக்கணக்கான உருவ பொம்மைகளை வாங்கி வைத்து விளக்கேற்றி வழிபட்டனர். பின்பு குதிரை எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வேதாரண்யம் டிஎஸ்பி முருகவேல், வாய்மேடு இன்ஸ்பெக்டர் கன்னிகா தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

Tags : Thakattur ,Vedaranyam , Vedaranyam: Thakattur Groom Veeran Thirumeni Amman Temple Festival near Vedaranyam on the 24th
× RELATED வேதை அருகே பாஜ அலுவலகம் திறப்பு:...