திருமயம் : அரிமளம் அருகே கோயில் பங்குனி திருவிழாவையொட்டி நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் 10 காளைகள் கலந்துகொண்டன.புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே உள்ள ஓணாங்குடி முத்துமாரி அம்மன் கோயில் பங்குனி 10ம் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு அம்மன் திடலில் நேற்று நடைபெற்றது. வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 10 காளைகள் கலந்துகொண்டன. ஒவ்வொரு காளையையும் அடக்குவதற்கு 25 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதனிடையே 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு அணிகளாக மாடுகளை அடக்குவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மாடுகள் தன்னை மாடுபிடி வீரர்கள் நெருங்க விடமால் விரட்டி, விரட்டி பாய சென்றது. இதில் 4 மாடுகளை மாடுபிடி வீரர்கள் மடக்கி பிடித்த நிலையில் 6 மாடுகள் வீரர்கள் கையில் சிக்காமல் பரிசுகளை தனது உரிமையாளர்களுக்கு பெற்று தந்தது. இதனிடையே மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டன. மாடு பிடிபடவில்லை என்றால் மாடு வெற்றி பெற்றதாக அறிவித்து மாட்டின் உரிமையாளருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை ஒணாங்குடி விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.