நியூயார்க் :உக்ரைனின் புச்சா நகரில் 400க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டது ஆழமான காயத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறியுள்ள இந்தியா, இது தொடர்பாக சுதந்திரமாக சர்வதேச விசாரணை தேவை என்று வலியுறுத்தி உள்ளது. ரஷ்யாவுக்கு ஆதரவாக ஐ.நா.வில் நடுநிலை வகித்தது. சலுகை விலையில் எரிபொருள் இறக்குமதி செய்து கொள்ள இசைவு பெற்றது போன்றவற்றால் அந்த நாட்டுடனான உறவை இந்தியா தொடர்ந்து பேணி வருகிறது. ஆனால் உக்ரைனின் புச்சா நகரில் தெருவெங்கும் அப்பாவி மக்களின் சடலம் கிடந்த நிகழ்வு மற்றும் ஒரே இடத்தில் 400க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு குவிக்கப்பட்டு இருப்பதற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்த படுகொலைகள் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.வில் பேசிய இந்தியாவின் ஐ.நா.வுக்கான இந்திய தூதர் திருமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார். புச்சா நகரில் ரஷ்ய ராணுவம் போர் குற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்க அதிபர் ஜோபிடன் புகார் கூறி இருந்தார். ரஷ்யாவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன்பு நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் ஒன்றரை மாதத்தில் முதல்முறையாக இந்தியாவும் ரஷ்யாவுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளது.