×

கானத்தூரில் 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதல் திருமணம் நிச்சயமான நெல்லை இன்ஜினியர் பலி: காவலர் உள்பட 2 பேர் படுகாயம்

சென்னை: கானத்தூரில் இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் திருமணம் நிச்சயமான சாப்ட்வேர் இன்ஜினியர் பரிதாபமாக உயிரிழந்தார். காவலர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் சுடலைமுத்து (24). முட்டுக்காடு கரிகாட்டு குப்பத்தை சேர்ந்தவர்அரவிந்த் (28). இருவரும் நண்பர்கள். இவர்கள் கேளம்பாக்கம் அருகே படூர் ஐடி நிறுவனத்தில்  சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தனர். அரவிந்த் மனைவி தெய்வானை (24). இவர்களுக்கு 5 மாத குழந்தை உள்ளது. சுடலைமுத்துவுக்கு 2 மாதத்தில் திருமணம் நடைபெற இருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுடலைமுத்துவும், அரவிந்தும்   கானத்தூரில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கானத்தூர் காவல் நிலையம் எதிரே வந்தனர். அப்போது, காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் வீரமணி (42) திடீரென பைக்கில் சாலையை கடக்க முயன்றுள்ளார். இதனால் 2 பைக்குகளும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. பைக்கில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அப்பகுதியினர் விரைந்து வந்து, படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு, ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது, சுடலைமுத்து வரும் வழியிலேயே இறந்தது தெரிந்தது. தலையில் படுகாயம் அடைந்த அரவிந்த் மேல் சிகிச்சைக்காக,  ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். லேசான காயத்துடன் காவலர் வீரமணி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, கானத்தூர் இன்ஸ்பெக்டர் தன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் நிச்சயமான சாப்ட்வேர் இன்ஜினியர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Kanathur ,Marriage , 2 bikes collide head-on in Kanathur
× RELATED கட்டாய திருமணத்துக்காக பிளஸ்-2 மாணவி...