சென்னை: மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோயில் சாலையில் உள்ள பிரபல வங்கி ஏடிஎம் மையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் முகமூடி அணிந்தபடி புகுந்த மர்ம நபர், இரும்பு ராடு போன்ற ஆயுதத்தால் ஏடிஎம் மெஷினில் உள்ள பணப்பெட்டியை உடைக்க முயன்றுள்ளார். ஆனால் முடியாததால் அங்கிருந்து வெளியேறிய அவர், அதே சாலையில் உள்ள மேற்கண்ட வங்கிக்கு சொந்தமான மற்றொரு ஏடிஎம் மையத்திற்குள் புகுந்து, மெஷினை உடைக்க முயன்றுள்ளார். அந்த மெஷினிலும் பணப்பெட்டியை உடைக்க முடியாததால் அங்கிருந்து வெளியேறி, மூன்றாவதாக அதே சாலையில் உள்ள மற்றொரு வங்கியின் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்து, பணப்பெட்டியை உடைக்க முயன்றுள்ளார். அந்த மெஷினிலும் பணப்பெட்டியை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பியுள்ளார்.
இதனிடையே, இந்த ஏடிஎம் மையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சி அடிப்படையில், மும்பையில் உள்ள வங்கி தலைமை கட்டுப்பாட்டு அறையில் எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. இதுபற்றி வங்கி நிர்வாகம் உடனடியாக சென்னை மாநகர காவல் ஆணையரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து மடிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே, மடிப்பாக்கம் இரவு ரோந்து போலீசார், மேற்கண்ட ஏடிஎம் மையங்களுக்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்த மெஷின்களை மர்ம நபர் உடைக்க முயன்றதும், முடியாததால் தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, ஏடிஎம் மையங்களில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.