திருமயம்: அரிமளம் அருகே மிரட்டுநிலையில் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்றுகாலை மாட்டுவண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. இதேபோல் ஓணாங்குடியில் மஞ்சுவிரட்டு நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள மிரட்டுநிலை முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10ம் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை கிராமத்தவர்கள் சார்பாக மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது.
இதில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், அறந்தாங்கி, சிவகங்கை, காரைக்குடி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பந்தைய மாடுகள் கலந்து கொண்டன. பெரியமாடு, கரிச்சான் மாடு என இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது. முதலில் நடைபெற்ற பெரியமாடு பிரிவில் 15 ஜோடி மாடுகளும், இரண்டாவதாக நடைபெற்ற கரிச்சான் மாடு பந்தயத்தில் 30 கோடி மக்களும் கலந்து கொண்டனர். இதில் முதல், 2ம், 3ம், 4ம் இடங்களைப் பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
அரிமளம்-புதுக்கோட்டை சாலையில் இருபுறமும் மக்கள் திரளாக வந்திருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை மிரட்டுநிலை கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். அரிமளம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோல் அரிமளம் அருகே உள்ள ஓணாங்குடி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா முன்னிட்டு இன்று 12 மணி அளவில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 10 மாடுகள் கலந்து கொண்டன.
நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாடாக மஞ்சுவிரட்டு திடலில் அவிழ்க்கப்பட்டது. அவிழ்க்கப்பட்ட மாடுகளை பிடிக்க 9 மாடுபிடி வீரர்கள் கொண்ட குழு களமிறங்கியது. குறிப்பிட்ட நேரத்திற்குள் மாடுகளை பிடித்த வீரர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இதேபோல் வீரர்களிடம் பிடிபடாத மாடுகளுக்கு மாட்டின் உரிமையாளருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இதனை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான மக்கள் வந்திருந்தனர்.