ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 25 கிலோ கஞ்சாவை நேற்று அதிகாலை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில் கடந்த மாதம் 28ம் தேதி முதல் கஞ்சா மற்றும் போதைப் பொருள் வேட்டை நடைபெற்று வருகிறது. இதனையொட்டி திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் மற்றும் ஓடும் ரயில்களில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் பறிமுதல், கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள 1வது பிளாட்பாரத்தில் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் ரயில் நிலையத்திலிருந்து கேரளா மாநிலம் ஆலப்புழா வரை செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. அப்போது, ஜோலார்பேட்டை ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் அந்த ரயிலில் சோதனை செய்தனர்.
இதில் முன்பதிவு செய்யப்பட்ட டி 1 கோச்சில் கழிவறை பெட்டியின் அருகில் கேட்பாரற்று கிடந்த 3 பைகளை பறிமுதல் செய்து சோதனை செய்தனர்.
அதில் 25 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து ஓடும் ரயிலில் கஞ்சாவை கடத்திய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.