சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலக குறை தீர்ப்பு கூட்டத்தில், மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.சிவகங்கை அருகே கீழப்பூங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வசந்தகுமாரி(57). கூடை பின்னும் தொழில் செய்து வருகிறார். 2 மகன்கள் உள்ளனர். இவருக்கு கல்லல் போலீஸ் குடியிருப்பு அருகே 10 சென்ட் இடம் உள்ளது.
அங்கு புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த இடம் தங்களுக்கு சொந்தம் எனக்கூறி, அதே ஊரை சேர்ந்த 3 பேர் பிரச்னை செய்து வருகின்றனர். இதுதொடர்பாக ஆர்டிஓ கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையில், வசந்தகுமாரிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது.இதையறிந்த அவர்கள், வீடு கட்டுவதை தடுத்து உள்ளனர்.
நேற்று கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாமில் மனு அளிக்க வந்த வசந்தகுமாரி, பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றினார். அருகில் இருந்த போலீசார் தடுத்து, அவரை சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இதனால் சிறிது நேரம் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.