திருமலை : திருப்பதி கோதண்டராம சுவாமி கோயிலில் பிரமோற்சவ விழாவின் 6ம் நாளான நேற்று, அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி சுவாமி அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருப்பதி கோதண்டராம சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் 9 நாட்கள் நடக்கும் பிரமோற்சவ விழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 6ம் நாளான நேற்று காலை அனுமந்த வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அப்போது, சிறுமிகள் கோலாட்டம் ஆடியபடி வந்தனர். காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை நடந்த வாகன சேவைக்கு பிறகு, பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகிய பூஜை பொருட்களால் சுவாமி அபிஷேகம் நடைபெற்றது.மாலையில் ஊஞ்சல் சேவையும், இரவு கோதண்டராம சுவாமி கஜ வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கோயில் ஜீயர்கள், துணை செயலதிகாரி பார்வதி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.