கொழும்பு : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. அந்நாடு முழுவதும் 10,000த்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் விடிய விடிய போராட்டங்களில் ஈடுபட்டு அரசுக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றன. பொருளாதார சரிவு, விலைவாசி உயர்வை கண்டித்து இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போராட்டங்களால் பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவையில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
ஆனால் அமைச்சர்கள் ராஜினாமா வெறும் கண் துடைப்பு என்று அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் என்றும் போராட்டக் காரர்கள் வலியுறுத்தி வருகின்றன. தலைநகர் கொழும்புவில் போராட்டக்காரர்கள் விடிய விடிய அயராமல் அரசுக்கு எதிராக முழங்கினர். சுதந்திர தின சதுக்கத்தில் கூடியிருந்த போராட்டக்காரர்கள் செல்போன்களில் டார்ச் விளக்குகளை ஒளிரவிட்டபடி முழக்கம் எழுப்பினர். ராஜபக்சேக்கள் இல்லம், அலுவலகம் உள்ளிட்டவை போராட்டக்காரர்களில் சூழப்பட்டு கல்வீச்சு நடத்தப்பட்டது. சாலையில் திரண்ட போராட்டக்காரர்கள் பாட்டு பாடியும் கோத்தபய ராஜபக்சே வீடு திரும்ப வேண்டும் என்றும் முழங்கியவாறு எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை போலீசார் விரட்டி அடித்தனர். பொதுமக்கள் கைகளில் தீப்பந்தங்கள், பதாகைகளை ஏந்தி அரசுக்கு எதிராக போராட்டங்களில் குதித்தனர்.