கோரக்பூர்: உபி மாநிலம் கோரக்பூர் கோயிலில், போலீஸ்காரர்களை அரிவாளால் தாக்கிய ஐஐடி பட்டதாரி கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் பிரசித்தி பெற்ற கோரக்நாத் கோயில் உள்ளது. கோயிலின் தலைமை பூசாரியாக உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் இருப்பதால், கோயிலை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு இருக்கும். இந்நிலையில், நேற்று கோயிலை நோக்கி இளைஞர் ஒருவர் ஓடிச் சென்றார். கோயிலுக்குள் நுழைய முயன்ற அவரை அங்கிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அரிவாளை எடுத்த அந்த நபர் போலீஸாரை தாக்கினார்.
அதன் பிறகு போலீஸாரும், பொதுமக்களும் சேர்ந்து கற்களை வீசி அந்த நபரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் அவரை சரமாரியாக அடித்தனர். போலீசார் கூறுகையில், ‘‘பிடிபட்டவர் பெயர் முர்தாசா. இவர் கடந்த 2015ம் ஆண்டு மும்பை ஐஐடியில் பட்டம் பெற்றவர். இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்பதை மறுக்க முடியாது. தற்போது விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது’’ என்றனர்.