மதுரை: மதுரையில் சொந்த மகனாலேயே தாய் துன்புறுத்தப்படுவதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் மகனிடமிருந்த வீட்டை மீட்டு தாய்க்கு வழங்கவேண்டும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டது. மதுரையை சேர்ந்த பிச்சையம்மாள் என்பவர் உய்ரநீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் மதுரை கோரிபாளையத்தில் இருந்த தனது வீட்டை தன் மகன் பெயருக்கு மாற்றியதாகவும், ஆனால் அவர் தன்னை முறையாக பார்த்துக்கொள்வதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த வீட்டில் இருந்து காலி செய்யும்படி, தன்னை தனது மகன் மற்றும் மருமகள் துன்புறுத்துவதால், அதனை பெற்றோர் மற்றும் மூத்தகுடி மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்குத்தூஷ் மனுதாரர் தனது சொந்த மகனால் துன்புறுத்தப்படுவதாலும், அவர் முதியவர் என்பதாலும் அவரை மீட்க வேண்டிய தேவை இந்த நீதிமன்றத்திற்கு உள்ளது என்றார். மனுதாரருக்கு சொந்தமான வீட்டில் இருந்து அவரது மகன் மற்றும் மருமகளை 4 வாரத்தில் வெளியேற்றி, வீட்டை மனுதாரரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மதுரை மாநகர காவல் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.