நெல்லை : நெல்லையில் மருத்துவ குணம் மிகுந்த சரக்கொன்றை பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. புராணங்களில் சரக்கொன்றை பூக்கள் முக்கிய இடம்பிடித்துள்ளன. மஞ்சள் நிறத்தில் சரமாக பூத்துக்குலுங்கும் இவை தென்கிழக்கு ஆசிய தெற்கு நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. இது கேரள மாநிலத்தின் மாநில மலராக உள்ளது. தாய்லாந்து நாட்டின் தேசிய பூ மற்றும் மலராக விளங்குகிறது. தமிழகத்தில் தமிழ் புத்தாண்டில் இந்தப்பூக்களை பலர் இல்லங்களில் தோரணமாக கட்டி அழகுபடுத்துவார்கள். சித்திரை மாதத்தை வரவேற்கும் விதமாக சரக்கொன்றை மலர் இப்போதே நெல்லையில் பூத்து குலுங்குகின்றன. நெல்லை மாநகரின் பல்வேறு வீதிகளில் இந்த சரக்கொன்றை மரங்களில் பூக்கள் அதிகளவில் பூத்துள்ளன. பார்ப்பதற்கு ரம்யமாக காட்சித்தரும் இதை பலர் தங்கள் செல்போன் கேமராவில் படம் பிடித்து செல்கின்றனர்.