×

நாங்குநேரியில் தாயான பிளஸ் 1 மாணவி-பணகுடி வாலிபர் போக்சோவில் கைது

நாங்குநேரி :  நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கிராமத்தில் நடந்த கோவில் கொடை விழாவிற்கு ஒலிபெருக்கி கட்டுவதற்கு பணகுடி பகுதியைச் சேர்ந்த இசக்கியப்பன் என்ற மஸ்தான் வந்துள்ளார். 3 நாட்கள் கிராமத்தில் தங்கியிருந்த போது இவருக்கும் அந்த மாணவிக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. பெற்றோருக்கு தெரியாமல் மாணவி, இசக்கியப்பனுக்கு பணம், நகைகள் கொடுத்ததாக கூறப்படுகிறது. நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமாகி அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு மாணவிக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் அவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மாணவியின் வயிற்றில் நீர்க்குமிழிகள் இருப்பதாகவும் வேறொரு பிரச்னையும் இல்லை எனக்கூறி அனுப்பியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவிக்கு மீண்டும் வயிறு வலி ஏற்படவே நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அவரது பெற்றோர் சேர்த்துள்ளனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி நிறைமாத கர்ப்பிணி என தெரிவித்துள்ளனர். சிறிது நேரத்தில் மாணவிக்கு சுகப்பிரசவம் ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மருத்துவர்கள் நாங்குநேரி மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.  இன்ஸ்பெக்டர் பிரேமா, அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். இதில் பணகுடி பகுதியைச் சேர்ந்த இசக்கியப்பனுடன் ஏற்பட்ட நட்பினால் தான் நடந்ததாக மாணவி கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று தனிப்பிரிவு போலீசார் பணகுடியில் வைத்து இசக்கியப்பனை பிடித்து நாங்குநேரிக்கு அழைத்து வந்தனர். பின்னர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Nanguneri ,Pokcho , Nanguneri: A student from a village near Nanguneri in Nellai district receives government assistance in Palayankottai.
× RELATED “ராபர்ட் ப்ரூஸுக்கு அர்ப்பணிப்புடன்...