சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கை: நெல்லிவாசல் நாடு அருகே, புலியூர் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் திறந்த மினிவேனில், ஆஞ்சநேயர் கோயிலுக்கு வழிபடுவதற்காக சென்றனர். அப்போது மலைப்பாதையில் சாலை வசதி சரியில்லாத காரணத்தால், கட்டுப்பாட்டை இழந்த வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததால் 11 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் பெண்கள். உயிரழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மிகவும் கவலை அடைந்து, மீளாத்துயரத்தில் இருக்கிறார்கள். இந்த விபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகளை நினைத்து தமிழக மக்கள் சோகமடைந்துள்ளனர். தமிழக அரசு, மலைப்பகுதிகளில் நல்ல சாலை வசதிகளை செய்து கொடுப்பதிலும், சாலைப்போக்குவரத்தின் பாதுகாப்பிலும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மலைப்பகுதிகளில் இது போன்ற எந்த ஒரு விபத்தும் இனிமேல் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.