×

ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரம் தம்பி மனைவியை குழந்தையுடன் வெட்டிக் கொன்ற வாலிபர் கைது: தீவைத்து எரித்தபோது சிக்கினார்; நத்தம் அருகே கொடூரம்

நத்தம்: ஆசைக்கு இணங்க மறுத்த தம்பி மனைவியை குழந்தையுடன் வாலிபர் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கரந்தமலை மீதுள்ள  பெரியமலையூர் அடுத்த வலசு பகுதியை சேர்ந்தவர்கள் நல்லப்பிச்சன் மகன்கள் கருப்பையா (30), சிவக்குமார். கருப்பையாவிற்கு திருமணம் ஆகவில்லை. தம்பி சிவக்குமார், அஞ்சலை (21) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது அஞ்சலை 4 மாத கர்ப்பமாக இருந்தார். சிவக்குமார் புளி வியாபாரம் செய்வதற்காக நேற்று முன்தினம் வெளியூர் சென்றுவிட்டார். அஞ்சலை குழந்தையுடன் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு விறகு வெட்ட வந்த கருப்பையா, அஞ்சலையை தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். இதற்கு அஞ்சலை மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த கருப்பையா அரிவாளால் அஞ்சலையை சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அருகில் அழுது கொண்டிருந்த 2 வயது குழந்தையையும் ஈவு இரக்கமின்றி வெட்டிக் கொன்றார்.பின்னர் அதே இடத்தில் இருவரையும் தீவைத்து எரித்தார். அப்பகுதியில் இருந்து நீண்டநேரம்  புகை வருவதை பார்த்து சந்தேகமடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து  நத்தம் போலீசார்  சம்பவ இடத்திற்கு வந்தனர். விசாரணையில், கருப்பையா தனது தம்பியின் மனைவி, மகளை கொலை செய்து எரித்தது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிந்து கருப்பையாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Natham , Young man arrested for stabbing his wife to death with a child for refusing to comply with a wish Atrocities near Natham
× RELATED நத்தம் கோவில்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா