நத்தம்: ஆசைக்கு இணங்க மறுத்ததால் தம்பி மனைவியை, குழந்தையுடன் வெட்டி கொன்று, உடல்களை எரித்த கொடூரனை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மலையூர் அடுத்த வலசு பகுதியை சேர்ந்தவர் நல்லப்பிச்சன். இவரது மகன்கள் கருப்பையா (30) மற்றும் சிவகுமார். இதில் கருப்பையாவிற்கு திருமணம் ஆகவில்லை. தம்பி சிவக்குமாருக்கு திருமணமாகி விட்டது. இவரது மனைவி அஞ்சலை (21). இவர்களுக்கு 2 வயதில் மலர்விழி என்ற மகள் உள்ளார். மேலும் அஞ்சலை 4 மாத கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று சிவகுமார் புளியம்பழம் வியாபாரம் செய்வதற்காக வெளியூர் சென்றுவிட்டார். மாலை நேரத்தில் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் அஞ்சலை ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அவருடன் குழந்தை மலர்விழியும் இருந்துள்ளார். அஞ்சலை ஆடு மேய்த்து கொண்டிருந்த பகுதிக்கு, கருப்பையா விறகு வெட்ட சென்றுள்ளார். அஞ்சலை தனியாக இருந்ததை பார்த்த கருப்பையா, தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு அஞ்சலை மறுக்கவே, அவரை கட்டாயப்படுத்தியுள்ளார். அவர் தொடர்ந்து மறுக்கவே ஆத்திரமடைந்த கருப்பையா, அரிவாளால் அஞ்சலையை சரமாரியாக வெட்டியுள்ளார்.
அருகில் அழுது கொண்டிருந்த குழந்தையையும் வெட்டியுள்ளார். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின் இருவரது உடல்களையும் தீவைத்து எரித்துள்ளார். இதில் இருவரது உடல்களும் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. புகை வருவதை பார்த்து அப்பகுதி மக்கள் நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரித்தனர். தம்பி மனைவி மற்றும் குழந்தையை கருப்பையா கொன்று எரித்தது தெரியவந்தது. அவரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.