திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் அடையாளம்பட்டு மஸ்ஜிதே முபாரக் மற்றும் அரபி மதரஸா மசூதியின் தலைவர் எஸ்.கலில் பாஷா, செயலாளர் ஜெ.சையது காதர், பொருளாளர் பி.மொஹம்மது ரபிக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் நீலவானத்து நிலவன் தலைமையில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதன் விவரம், பூந்தமல்லி வட்டம், அடையாளம்பட்டு கிராமத்தில் உள்ள கூவம் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் எங்களது மதரஸா மற்றும் பள்ளிவாசல் இயங்கிவருகிறது. இதில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இஸ்லாமிய முறைப்படி வழிபட்டும், கல்வி பயின்று வருகின்றனர்.
நீர்நிலை மற்றும் புறம்போக்கு நிலத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களையும் அப்புறப்படுத்த அரசு முடிவெடுத்துள்ள நிலையில் நாங்களும் எங்களது மதரஸாவை காலி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தாங்கள் இஸ்லாமிய கல்விக்காகவும், வழிபாட்டிற்காகவும் அடையாளம்பட்டு கிராமம், புல எண். 104 ல் உள்ள 3 சென்ட் காலியிடத்தை மதரஸா கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.