சென்னை: வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த 28 வயதுடைய பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீலாக வேலை செய்து வருகிறார். இவர், ேநற்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வேலூருக்கு அரசு பேருந்தில் தனது தாயுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது பின் சீட்டில் அமர்ந்திருந்த ராகவன்(40), அவரிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வானகரம் அருகே பேருந்து நிறுத்தப்பட்டு மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராகவனை கைது செய்தனர்.மற்றொரு சம்பவம்: திருவான்மியூர் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய பெண் கடந்த 31ம் தேதி அதிகாலை திருவாரூரில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு தனியார் பேருந்தில் வந்தார். பின்னர், அங்கிருந்து பெங்களூரு செல்ல பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பின்னர் பெங்களுரூ சென்ற அந்த பெண் மின்னஞ்சல் மூலம் கோயம்பேடு போலீசில் புகாரளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல், மூலகொத்தளத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை புழல் மகாவீரர் கார்டன் 2வது தெருவை சேர்ந்த சாம்சங்ராஜ் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். கடந்த 2018ம் ஆண்டு சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அதை வீடியோ எடுத்து மிரட்டினார். புகாரின்படி மாதவரம் அனைத்து மகளிர் போலீசார் நேற்று முன்தினம் சாம்சங்ராஜை கைது செய்தனர்.