சென்னை: திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சி சீமான், பேட்டி அளித்து கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் சுரங்க பணிக்காக கடைகள், வீடுகளை இடிக்க ரயில்வே துறை திட்டமிட்டிருந்தது. இதற்கு பொதுமக்கள், வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று காலை தனியார் வீடுகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற ரயில்வே துறை அதிகாரிகள் வந்தனர். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையில், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்தில் கலந்துகொண்டு எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது, `வீடுகளை அப்புறப்படுத்துவதற்கு முன்பு அவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்பட வேண்டும்’ என சீமான் கூறினார். தொடர்ந்து நிருபர்களுக்கு சீமான் பேட்டி அளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே கட்சி தொண்டர்கள் அவரை மீட்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் ஏற்றிச்சென்றனர். பின்னர் சிறிது தூரம் சென்றதும் மயக்கம் தெளிந்தார். பின்னர் அவர் தனது சொந்த காரில் சென்று அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.