கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துரையாடல் நடத்தினார். பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் தேர்வினை பயமின்றி எதிர்கொள்ள ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த 2018ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் தேர்வுக்கு தயாரகுங்கள் (பரிக்சா பே சர்ச்சா) என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பரிக்சா பே சர்ச்சா நிகழ்ச்சி டெல்லியில் உள்ள டல்கோத்ரா விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒளிபரப்பப்பட்டது. அதன்படி, கோவை பாரதியார் பல்கலையில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் மெகா திரையில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பப்பட்டது. இதில், பல்கலை துணைவேந்தர் காளிராஜ், பதிவாளர் முருகவேல், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பல்கலைக்கழக ஆசிரிய சங்க தலைவர் வசந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் பேசிய பிரதமர் மோடி, மாணவர்கள் தேர்வின்போது பதற்றம் அடைவதில் இருந்து விலகி இருக்க வேண்டும். நீங்கள் எதை செய்தாலும் முழு நம்பிக்கையுடன் செய்து கொண்டே இருங்கள். பல்வேறு பண்டிகைகளுக்கு மத்தியில் பொதுத்தேர்வுகள் வர உள்ளன. தேர்வை நாம் ஒரு பண்டிகையாக கொண்டாட துவங்கினால், பல வண்ணங்கள் நிறைந்திருக்கும். உங்கள் பலவீனங்களை பலமாக மாற்றுங்கள் என மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசினார்.