×

பாஜ தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு: ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவு

சென்னை: தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வரும் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தமிழக பாஜ தலைவராக அண்ணாமலை இருந்து வருகிறார். அவருக்கு இருக்கக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தலை நுண்ணறிவு பிரிவினர் அறிக்கையாக தயார் செய்து, ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியதாகவும், அதனடிப்படையில் அவருக்கு ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்களையடுத்து நுண்ணறிவு பிரிவினர் தயாரித்திருக்கக்கூடிய அறிக்கையின் அடிப்படையில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அண்ணாமலைக்கு நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த நபர் கொலை மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

இத்தகைய சூழ்நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ‘ஒய் பிரிவு’ பாதுகாப்பு என்பது இந்தியாவில் 4வது இடத்தில் இருக்கக்கூடிய பாதுகாப்பு பிரிவாக பார்க்கப்படுகிறது. அதனடிப்படையில் அண்ணாமலைக்கு 2 தனிப்பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 11 பேர் கொண்ட ஆயுதமேந்திய சிஆர்பிஎப் வீரர்கள் (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) மற்றும் மாநில போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Baja ,Annamalai ,Union Interior Ministry , BJP leader Annamalai gets 'Y' section security: Union Home Ministry orders
× RELATED தேர்தல் விதியை மதிக்கிறதே இல்ல…...