சிவகாசி: செங்கோட்டை- மதுரை வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இதேபோல் மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ரயில்கள் நிறுத்தப்பட்டன. பின்னர் மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு மட்டும் ஒரு பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. இந்நிலையில், மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயிலை விரைவு ரயில்களாக மாற்றி இயக்கப்படும் என தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, செங்கோட்டை-மதுரை மார்க்கத்தில் இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று முதல் விரைவு ரயிலாக இயக்கப்படுகிறது.
இந்த ரயில் செங்கோட்டையில் இருந்து சிவகாசிக்கு நேற்று காலை 8.40 மணிக்கு வந்தடைந்தது. சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், எம்எல்ஏ அசோகன், ஸ்ரீகாளீஸ்வரி பட்டாசு ஆலை நிர்வாக இயக்குநர் ஏ.பி.எஸ். செல்வராஜன் மற்றும் பாரதீய ஜனதா கட்சி விருதுநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பார்த்தசாரதி, ஓபிசி அணியின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி, வர்த்தக சங்க தலைவர் ரவி ஆகியோர் செங்கோட்டை-மதுரை விரைவு ரயிலுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். ரயில் டிரைவர் மற்றும் கார்டுகளுக்கு சால்வை அணிவித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர்.