கோவை: கோவை பி.என்.புதூர் அடுத்த சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் சுவேதா (19). இவர் அன்னூர் கோவில்பாளையத்தில் உள்ள மெடிக்கல் அகடாமி விடுதியில் தங்கி, அந்த மையத்தில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்துள்ளார். இங்கு மதுரையை சேர்ந்த மாணவரும் படித்து வந்துள்ளார். இந்நிலையில், சுவேதாவுக்கும் மதுரை மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2 பேரும் காதலித்து வந்துள்ளனர். இந்த விஷயம் இரு வீட்டு பெற்றோருக்கும் தெரிய வந்துள்ளது.
மேலும் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு மதுரை மாணவரை பெற்றோர் வந்து ஊருக்கு அழைத்து சென்று விட்டனர். இதனால், காதலனுடன் பேச முடியாமல் தவித்து வந்த மாணவி சுவேதா, கடந்த 2 நாட்களாக மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று விடுதி அறையில் யாரும் இல்லாத போது, சுவேதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலை வகுப்பு முடிந்து விடுதி அறைக்கு வந்த சக மாணவிகள் சுவேதா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அவர்கள் அகடாமி நிர்வாகத்துக்கு தகவல் அளித்தனர். இது குறித்து தகவல் அறிந்த கோவில்பாளையம் போலீசார் சம்பவயிடத்துக்கு சென்று மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில், மாணவி தங்கியிருந்த அறையில் ஏராளமான காதல் கடிதங்கள் சிக்கியுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.