×

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ஒதுக்கீடுதாரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் பல்வேறு திட்டங்களில் பொது மக்களுக்கு, வாரிய விதிமுறைகளின் படி, மாதத் தவணைத் திட்டம், மொத்தக் கொள்முதல் திட்டம் மற்றும் சுயநிதித் திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பொதுவாக ஒதுக்கீடு செய்யப்பட்ட அலகுகளுக்குரிய  முழுத் தொகையையும் ஒதுக்கீடுதாரர்கள் வாரியத்திற்குச் செலுத்திய பின்னர், கிரயப் பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில், மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களால், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியப் பணிகளை ஆய்வு செய்த போது, வாரியத் திட்டங்களில் ஒதுக்கீடு பெற்ற சில ஒதுக்கீடுதாரர்கள், ஒதுக்கீடுகளுக்குரிய முழுத் தொகையைச் செலுத்தியிருந்தும் விற்பனைப் பத்திரம் பெற முன்வரவில்லை என்பதையும்,

இதற்காக பல முறை உரியக் கடிதம் சம்பந்தப்பட்ட ஒதுக்கீடுதாரர்களுக்கு அனுப்பப்பட்டும், சில ஒதுக்கீடுதாரர்கள் தங்களது இருப்பிட முகவரி மாற்றத்தால் கடிதம் சார்பு செய்ய முடியாமல் திரும்பப் பெறப்படுகிறது என்பதையும் அறிந்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள், இத்தகைய இனங்களில் முழுத் தொகையைச் செலுத்தியிருந்தும் விற்பனைப் பத்திரம் பெற்றிடாதவர்களும், நிலுவைத் தொகை செலுத்த வேண்டியவர்கள் நிலுவைத் தொகையினை செலுத்தி விரைவில் விற்பனைப் பத்திரம் பெற்றிட ஏதுவாக, நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி 04.04.2022 முதல் 08.04.2022 வரை வாரியத்தின் அனைத்துக் கோட்டம் / பிரிவு அலுவலகங்களில் விற்பனைப் பத்திரம் வழங்கும் மேளா நடைபெறவுள்ளது.  

எனவே, இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி நிலுவைத் தொகை செலுத்த வேண்டியவர்கள் உடனடியாகத் தொகையினை செலுத்திடவும், முழுத்தொகையினையும் செலுத்திய ஒதுக்கீடுதாரர்கள் அனைத்து மூல ஆவணங்களுடன் செயற்பொறியாளர் அலுவலகத்தில், மேலாளர் - விற்பனை மற்றும் சேவை அவர்களை அணுகி விற்பனைப் பத்திரம் பெற்றுப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 


Tags : Tamil Nadu Housing Board , Tamil Nadu Housing Board An important announcement to the allottees
× RELATED வீட்டுவசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீடு...